WhatsApp Channel
ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அழைப்பைப் பெற்ற பிரதமர் மோடி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது தனக்கு அதிர்ஷ்டம் என்று கூறினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தஷ்ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு உத்தரப்பிரதேச அரசு மேற்பார்வையிட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
இரண்டு மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி கோவில் நடை திறக்கப்படும். அன்றுதான் அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்த விழாவில் பங்கேற்கப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது X சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார், “இன்று ஒரு உணர்ச்சிகரமான நாள். ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்திரத்தின் அதிகாரிகள் என்னை எனது இல்லத்தில் சந்திக்க வந்தனர். அவர்கள் ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழாவிற்கு என்னை அயோத்திக்கு அழைத்தனர். நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். என் வாழ்நாளில், இந்த வரலாற்று நிகழ்வைக் காண நான் அதிர்ஷ்டசாலி.” .
அயோத்தி ராமர் கோவிலில் சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோருக்கான சன்னதிகளும் உள்ளன. ரூ.1800 கோடி செலவில் கட்டப்படும் இந்த பிரமாண்ட ராமர் கோவில் மொத்தம் 2.7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 57,400 சதுர அடியில் கோயில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
Discussion about this post