WhatsApp Channel
உத்தரபிரதேசத்தில் உள்ள ஞானவாபி வளாகத்தில் இந்துக்கள் பூஜை செய்யலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், முஸ்லிம் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி 17 ஆம் நூற்றாண்டில் இந்து கோவில்களை இடித்து கட்டப்பட்டது.
எனவே, மசூதியை ஆய்வு செய்யக் கோரி இந்து அமைப்பினர் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும், டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தது.
ஆனால், இரு நீதிமன்றங்களும் வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டன. இதையடுத்து, ஞானவாபி வளாகத்தில் விரிவான அறிவியல் ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த 5 மாதங்களாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது இந்துக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தொல்லியல் துறை அதிகாரிகள், மசூதி தொடர்பான அறிக்கையை, வாரணாசி நீதிமன்றத்தில், டிச., 18ல் தாக்கல் செய்தனர்.இதையடுத்து, ஞானவாபி மசூதியின் தரை தளத்தில், இந்துக்கள் வழிபட, வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதற்கிடையில் இந்துக்கள் இங்கு பூஜை செய்ய அனுமதிக்கக் கூடாது என முஸ்லிம் அமைப்புகள் மனு தாக்கல் செய்திருந்தன. முழு விசாரணைக்குப் பிறகு அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், இந்த வளாகத்தில் இந்துக்கள் பூஜை செய்யலாம் என தீர்ப்பளித்தது. மேலும், முஸ்லிம் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
Discussion about this post