ஓ.பன்னீர்செல்வம் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனக் கோரி அளிக்கப்பட்ட மனுவைச் சம்பந்தப்பட்ட விதிமுறைகளின்படி ஆய்வு செய்து, சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அதிமுக சின்னத்தை எதிர்த்து போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனத் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்ற பெண் சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள கால்வாயில் நீரை திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவிடம், மிலானியின் மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டபோது,
“ஓபிஎஸ் மீது இதுவரை அதிமுகக் கட்சியின் கொறடா அல்லது நிர்வாகத்தில் யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனால் அவரின் தொகுதியைச் சேர்ந்த ஒரு நபர் புகார் அளித்துள்ளார். இவ்வகையான விவகாரங்களில், இந்திய அரசியலமைப்பின் 10வது சட்டப்பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கேற்ப தேவையான ஆய்வு நடந்து, சட்டப் பேரவையின் விதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் விளக்கமாக பதிலளித்தார்.