WhatsApp Channel
வெள்ள நிவாரணமாக முதற்கட்டமாக ரூ.5,060 கோடி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையில் மழை பெய்தது. தொடர்ந்து 36 மணி நேரம் பெய்த கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. தற்போது மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது. இருப்பினும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதற்கிடையில், வெள்ள நிவாரணமாக முதல்கட்டமாக ரூ.5,060 கோடி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புயல் பாதிப்பை சமாளிக்க தமிழகத்திற்கு ரூ.450 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் இணையதளத்தில் கூறியிருப்பதாவது:-
மிக்ஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை பாதித்துள்ளது. பாதிப்புகள் வேறுபட்டாலும், இரு மாநிலங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநில அரசுகளுக்கு உதவ பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2வது தவணையாக தமிழகத்திற்கு ரூ.450 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும் முன்பணமாக வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இந்த இரு மாநிலங்களுக்கும் முதல் தவணை தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.
அதேபோல், சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்துக்கு முதல் முறையாக ரூ.561.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமித்ஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 8 ஆண்டுகளில் 3வது பெரிய வெள்ளத்தை சென்னை சந்தித்துள்ளது. கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் குறைப்பு நிதியத்தின் கீழ், நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.561.29 கோடி ஒதுக்கீடு செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 500 கோடியை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டம் சென்னை வெள்ளத்தை எதிர்கொள்ள உதவும். இது முதல் நகர்ப்புற வெள்ள தடுப்பு முயற்சியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் நிதியின் கீழ் ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நகர்ப்புற வெள்ளத் தடுப்பு நிதியாக ரூ.561.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.1011.29 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
Discussion about this post