WhatsApp Channel
பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க தயார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதையடுத்து நாளை மறுநாள் (பிப்ரவரி 1) மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, ராகுல் காந்தி யாத்திரை மீதான தாக்குதல், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், திமுக, சிவசேனா, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல், அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசும் உறுதி அளித்துள்ளது.
Discussion about this post