ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது 1,315 மீட்டர் நீளமுடைய ஒரு பிரம்மாண்டமான ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம், செனாப் ஆற்றின் மேல் நிலத்திலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதுடன், இது உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. நிலநடுக்கங்களையும், பலத்த காற்றையும் தாங்கக்கூடிய வகையில் இது நவீன தொழில்நுட்பங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலம், இன்றைய தினம் (ஜூன் 6) பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. உதம்பூர் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர், பின்னர் செனாப் பாலம் அமைந்துள்ள இடத்திற்கு சென்றார். அவருடன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் முன்னிலையிலிருந்தனர். திறப்பு விழாவின்போது, பிரதமர் மோடி தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி பாலத்தின் வழியாக நடந்துச் சென்றார். தொடர்ந்து, பாலம் கட்டுவதில் ஈடுபட்டிருந்த பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
மேலும், செனாப் ஆற்றின் கிளையான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த பாலம் 473 மீட்டர் நீளத்துடன், ஆண்டு முழுவதும் இயக்கக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது. இது, காஷ்மீர் பள்ளத்தாக்கையும், இந்தியாவின் பிற பகுதிகளையும் இணைக்கும் முக்கிய தடையற்ற ரயில் போக்குவரத்து வழியாக அமைகிறது.
இதைத் தொடர்ந்து, இந்த பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இந்த ரயில் கத்ராவிலிருந்து ஸ்ரீநகருக்கு இயக்கப்படுவதால், பயண நேரம் சுமார் 3 மணி நேரமாக குறையும், இதனால் ஏற்கனவே உள்ள 5–6 மணி நேர பயண நேரம் கணிசமாக சுருங்கும்.
இதில் மேலும், உதம்பூர்–ஸ்ரீநகர்–பாரமுல்லா ரயில் பாதை (USPRL) திட்டத்தையும் பிரதமர் நாடிற்கு அர்ப்பணிக்கிறார். 272 கி.மீ நீளமுடைய இந்த திட்டம், சுமார் ₹43,780 கோடி செலவில் நிறைவு பெற்றுள்ளது. இதில் 119 கி.மீ பாதையில் மட்டும் 36 சுரங்கப்பாதைகள் மற்றும் 943 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கத்ரா பகுதியில் ₹46,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இத்துடன், பல்வேறு சாலை அபிவிருத்தி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
தேசிய நெடுஞ்சாலை-701ல் ரஃபியாபாத் முதல் குப்வாரா வரை உள்ள சாலை விரிவாக்கத்திற்கும், நெடுஞ்சாலை-444ல் ரூ.1,952 கோடி மதிப்பிலான ஷோபியன் புறவழிச்சாலை திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்படுகின்றது.
ஸ்ரீநகரில் உள்ள சங்கராமா சந்திப்பிலும், தேசிய நெடுஞ்சாலை-44இல் உள்ள பெமினா சந்திப்பிலும் அமைக்கப்படும் இரண்டு மேம்பாலத் திட்டங்களும் தொடங்கப்படுகின்றன.
அதேபோல், ரூ.350 கோடி மதிப்பில் கத்ராவில் உருவாகும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி உயர் சிகிச்சை மருத்துவமனைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பின்னர் பிரதமர் மோடி முதன்முறையாக காஷ்மீர் பயணம் செய்திருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக கடுமையாக செய்யப்பட்டுள்ளன.