வாக்காளராக பதிய ஆதார் மட்டுமே போதுமானது என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை: பாஜக
வாக்காளராக பதிவு செய்ய ஆதார் மட்டுமே போதுமானது அல்ல என்று பாஜக தெரிவித்துள்ளது. இதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதாகவும் கட்சி கூறியுள்ளது.
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. அதற்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வருகிறார். இந்த திருத்தத்தில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தகுதி வாய்ந்தவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு வாக்கு திருட்டு நடக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பாஜக தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் அமித் மால்வியா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள், பெயரை சேர்க்க விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. இதுவரை 84,305 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இது நீக்கப்பட்டவர்களில் வெறும் 1.3 சதவீதம் தான். இயல்பான தவறுகளின் அளவுக்கும் குறைவானது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, இந்திய குடிமகனாக இல்லாதவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று நீதிமன்றம் அறிவித்தவர், அல்லது தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் — இவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் இடம் கிடையாது.
ஆதார் என்பது அடையாளம் மற்றும் முகவரி சான்று மட்டுமே. அது குடியுரிமை சான்றிதழ் அல்ல. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதாருடன் பிற ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது செல்லுபடியாகும். ஆதார் மட்டுமே போதுமானது என்று உச்ச நீதிமன்றம் எங்கும் கூறவில்லை.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதார் மட்டுமே போதும் என தேர்தல் ஆணையத்திடம் கோருவது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 16 மற்றும் ஆதார் சட்டத்துக்கு எதிரானது. உச்ச நீதிமன்றம் ஏற்காத ஒன்றை ஏற்கச் சொல்லுவது நீதிமன்ற அவமதிப்பு.
உண்மை என்னவென்றால், சிறப்பு தீவிர திருத்தம் முறையாக நடக்கிறது. ஆதார் மட்டுமே போதுமானது அல்ல. இறந்தவர்கள், போலி பெயர்கள், பங்களாதேஷ் நாட்டு மக்கள், மியான்மர் ரோஹிங்கியாக்கள் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இந்திய குடிமக்கள் மட்டுமே அடுத்த அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பார்கள்; வெளிநாட்டினர் அல்ல.
ஆனால், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்புகின்றன. வாக்கு திருட்டு குற்றச்சாட்டு என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்று,” என அவர் கூறினார்.