காலிஸ்தான் பிரிவினைவாத நாடாளுமன்ற உறுப்பினர் அம்ரித்பால் சிங் தனது தாயார் காலிஸ்தானுக்கு ஆதரவானவர் அல்ல என விமர்சித்துள்ளார். தனது குடும்பத்தை விட காலிஸ்தான் தான் தனக்கு முக்கியம் என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டார். காலிஸ்தான் இயக்கத்தில் ஈடுபட்டதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங், பஞ்சாப் மாநில அரசால் கைது செய்யப்பட்டார். அசாமின் திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித்பால் சிங், மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் காதுர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பஞ்சாபுக்குள் நுழையக் கூடாது, ஊடகங்கள் உட்பட யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில் மக்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்காக நான்கு நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். பதவியேற்பு விழாவுக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பதவியேற்ற உடனேயே மீண்டும் திப்ருகர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அம்ரித்பால் சிங்கின் தாயார் பல்விந்தர் கவுர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அம்ரித்பால் சிங் காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளர் இல்லை, அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அம்ரித்பால் சிங்கின் தாயார் பல்விந்தர் கவுர் கூறிய இந்தக் கருத்துகள் பரவலாக விவாதிக்கப்பட்டன. சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காலிஸ்தான் அம்ரித்பால் சிங்கிற்கு திரண்ட ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறையில் இருக்கும் அம்ரித்பால் சிங், தனது தாயாரின் காலிஸ்தான் எதிர்ப்பு உணர்வை மறுத்துள்ளார்.
அம்ரித்பால் சிங் தனது தாயை விமர்சித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கனவு காண்பது குற்றமல்ல, பெருமைக்குரியது என்று கல்சா ராஜ் கூறியுள்ளார்.
லட்சக்கணக்கான சீக்கியர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த பாதையில் இருந்து பின்வாங்குவது பற்றி தன்னால் ஒருபோதும் நினைக்க முடியாது என்றும், சீக்கியர்கள் ஒருபோதும் சமரசம் செய்ய நினைக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, தான் கூறியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டதாக அமிர்த் பால் சிங்கின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். உண்மைகளை தவறாக சித்தரிப்பதை ஊடகங்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றன. எனவே, காலிஸ்தானின் ஆதரவாளர்களை தனது பேச்சை வித்தியாசமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.