பொட்டு, திலகம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? என ஹிஜாப் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

0

பொட்டு, திலகம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? என ஹிஜாப் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

மும்பை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவர்கள் ஹிஜாப், நகாப், பர்தா, மத சின்னங்கள் தொடர்பான தொப்பிகள் அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என, சம்பந்தப்பட்ட கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.

பின்னர், இது தொடர்பாக மும்பை பல்கலைக்கழகத்தின் வேந்தர், துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் மாணவர்கள் மனு அளித்தும் எந்தப் பதிலும் கிடைக்காததால், சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு மற்றும் 3ஆம் ஆண்டு படிக்கும் 9 மாணவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம். அந்த மனுவில், ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எஸ்.சந்தூர்கர், நீதிபதி ராஜேஷ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜூன் 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் தொடர்புடைய கல்லூரி எத்தனை ஆண்டுகளாக செயல்படுகிறது? என்று கேள்வி எழுப்பினர்.

கல்லூரி தரப்பில் ஆஜரான வக்கீல் மாதவி திவான், கடந்த 2008ம் ஆண்டு முதல் கல்லூரி இயங்கி வருகிறது.அப்போது நீதிபதிகள், “இத்தனை ஆண்டுகளாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஆனால், தற்போது திடீரென மதம் இருப்பதை உணர்ந்து விட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், “பொட்டு, திலகம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா?” என நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேள்வி எழுப்பியுள்ளார். 441 முஸ்லிம் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்லூரிக்கு வருவதாகவும், ஒரு சில மாணவர்கள் மட்டும் போராட்டம் நடத்துவதாகவும் வழக்கறிஞர் மாதவி திவான் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதி சஞ்சய் குமார், “அவள் என்ன அணிய வேண்டும் என்பது அவளுடைய தனிப்பட்ட விருப்பம் இல்லையா? ஒருவரின் பெயரால் ஒருவரது மதம் வெளிப்படுகிறது இல்லையா? பெயர்களுக்குப் பதிலாக எண்களைக் கொண்டு அவர்களை அடையாளம் காட்டப் போகிறீர்களா?” என்று சரமாரியாக கேள்விகள் கேட்டார்.

நீதிபதி சஞ்சீவ் கண்ணா, மாணவர்கள் ஒன்றாக படிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது என்றும் கூறினார். அதே சமயம், வகுப்பறையில் முகத்தை மறைக்கும் பர்தா அணிந்து செல்லவும், கல்லூரி வளாகத்திற்குள் மத வழிபாடுகளில் ஈடுபடவும் அனுமதியில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here