உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார். மத்திய அரசுடன் தமிழக அரசு நல்லுறவுடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தாம்பரத்தின் அருகேயுள்ள ராஜகீழ்பாக்கம் ஏரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு பாஜகவினரால் தூய்மை பணியும் மரக்கன்றுகள் நடும் விழாவும் நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில செயலாளர் வினோஜ்.பி.செல்வம் மற்றும் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஏரிக்கரையை சுத்தம் செய்தும் மரக்கன்றுகளை நடியும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “சுற்றுச்சூழல் என்பது மனித வாழ்வுக்கு அத்தியாவசியமானது. கடந்த காலங்களில் இயற்கை சூழ்நிலை அமைதியாகவும் சீராகவும் இருந்தது. அதனால் மனிதர்களின் ஆயுள் நூறு ஆண்டுகள் வரை இருந்தது. ஆனால் இன்று சுற்றுச்சூழல் மாசடைந்ததன் காரணமாக மனித ஆயுள் குறைந்துவிட்டது” எனக் கூறினார்.
அவர் தொடர்ந்துகூறியதாவது: “சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். அனைவரும் மரம் நட வேண்டும்; பழைய மரங்களை பாதுகாக்க வேண்டும். வேளாண்மையில் இயற்கை உரங்களை பயன்படுத்தி, ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அனைத்துத் துறைகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 11 ஆண்டுகளில் விவசாய வளர்ச்சிக்காக மற்றும் தூய்மை இந்தியா திட்டங்களுக்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உள்ளங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி செய்யும் அரசு, மக்களுக்கு மேலும் ஒரு வருடம் நலமாக அரசு வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் எந்தத் திட்டத்திற்கும் தமிழக அரசு எதிராகவே செயல்படுகிறது. மத்திய அரசுடன் ஒத்துழைப்பு நெறியில் செயல்பட தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் ஜெயக்குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பிரதாப் மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராஜவேல், நகராட்சி ஆணையர் தாமோதரன், பொதுமேலாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன், அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள கூடப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்வில், பள்ளி மேலாண்மை குழுவின் துணைத் தலைவர் மல்லிகா, அங்கன்வாடி பணியாளர் சாந்தி, ஆசிரியர் உஷா, மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர்.