“பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி தரப்பு மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தி இருக்கிறேன்” – அண்ணாமலை

0

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்,” என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் (ஜூன் 12) செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கூறியதாவது:

“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 11 ஆண்டுகளாக நடத்தப்பட்ட நிர்வாகத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிகள் என்ன என்பதையும், அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தினோம் என்பதையும் மக்களுக்கு விளக்குவதே இந்நிகழ்வின் நோக்கம். 2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கான வாக்குறுதிகளை வாசித்து பாருங்கள் என நாங்கள் கூறுகிறோம்.

ஆனால் திமுக வாக்குறுதிகளை பற்றி இப்படிச் சொல்லவே மாட்டார்கள். 2014-ல் கூறியவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளோம். பொது சிவில் சட்டம் மட்டும் மீதமுள்ளது. இந்திய மக்களுக்கு ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்போம் என நாங்கள் உறுதியளித்தோம். கருப்பு பணத்தை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. கடந்த 11 ஆண்டுகளில் ₹1.45 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா காலத்திலும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட திட்டங்கள் முன்னேற்றம் கண்டன. ‘முத்ரா’ கடன் திட்டம் மூலம் சிறு தொழிலாளர்கள் பலர் பயனடைந்துள்ளனர். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் மத்திய ஜிஎஸ்டி, வருமானவரி மூலமாக மத்திய அரசுக்கு நிதி அனுப்பப்படுகிறது. ஆனால் மத்திய அரசு அதைவிட அதிக நிதியுதவியை வழங்கியுள்ளது.

திமுக அரசு அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50-ஐ கூட நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் மேடையில்மேடை ஒவ்வொரு சதவீத எண்ணிக்கையைக் கூறி வருகிறார். பாஜக ஆட்சி மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சி இருந்தபோதும் ஒரு முறை கூட விலை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை செயல்படுத்த அனுமதி பெற்றுவிட்டு, பின்னர் மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. செயற்கை இழைத் தொழிலில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க மத்திய அமைச்சருடன் தொழிலாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தோம். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலங்கள் இன்னும் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை. மீதமுள்ள நிலங்கள் வழங்கப்படுமானால் மட்டுமே மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தும்.

இந்த விரிவாக்கத்தில் தாமதத்திற்கு திமுக அரசே காரணம். கோவையில் என்ஐஏ அலுவலகம் நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறியுள்ளது. விஸ்வகர்மா, மலிவுத்தர மருந்தகம் போன்ற மத்திய அரசுத் திட்டங்கள் மற்ற மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுகின்றன; ஆனால் தமிழகத்தில் மாநில அரசு திட்டங்களைத் தடுக்கிறது.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கூட தமிழக அரசு மக்கள் நம்பிக்கையை தவறுகிறது. பிஎம் கிசான் திட்டத்தில், முன்னதாக 38 லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 21 லட்சமாக குறைந்துள்ளது. மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு தயங்குகிறது.

நான் பாஜகவின் தொண்டன். கட்சியின் வளர்ச்சிக்காக மட்டுமே பணியாற்றுகிறேன். தலைமை எடுத்த முடிவுகளை ஏற்கிறேன். பேச வேண்டிய இடத்தில் பேசுவேன், மௌனம் கடைக்க வேண்டிய இடத்தில் அமைதியாக இருப்பேன்.

கீழடி தொடர்பாக மத்திய அரசு கேட்கும் தகவல்களை தமிழக அரசு வழங்கவில்லை. ஆனால், அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைதளங்களில் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கிறார். எனக்குப் பரிபூரண ஆதரவாளர்கள் இல்லை; எல்லாரும் எனது நண்பர்களே.

‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டம் தொடர்பாக கனிமொழி, சசிதரூர் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் சில நாடுகளுக்கு சென்று சிறப்பாக விளக்கமளித்துள்ளனர். பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் முக்கியமானவர்கள்; ஒரே நோக்கில் செயல்படுவார்கள் என நம்புகிறேன்.

ராணுவ உற்பத்தித் திட்டங்களில் மாநில அரசின் அலட்சியத்தால், உ.பி. போன்ற மாநிலங்கள் அந்த வாய்ப்புகளை பெற்றுவிட்டன. மதுரை முருகன் மாநாட்டுக்கு திமுக தான் அதிக விளம்பரத்தை (அழைக்காமல்) செய்து கொடுத்துள்ளது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக இன்னும் பல மர்மங்கள் உள்ளன. சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியம்தான் குற்றவாளி என நான் கூறவில்லை; ஆனால் அவரையும் விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். இரண்டு காவல் அதிகாரிகள் ஒரு சந்தேகத்திற்கிடமான போன் அழைப்பை நடத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தரப்பு மேல்முறையீடு செய்ய அவரது வழக்கறிஞரிடம் கூறியுள்ளேன். தேவையான ஆதாரங்களை வழங்க தயாராக உள்ளேன்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here