பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ்களில், கடந்த காலங்களில் “இந்து மறவர்”, “இந்து வேளாளர்”, “இந்து நாடார்” என ஜாதிக்கு முன்னதாக “இந்து” என்ற சொல்லுடன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆன்லைன் மூலம் பெறப்படும் சான்றிதழ்களில் “இந்து” என்ற வார்த்தை அகற்றப்பட்டு, ஜாதி பெயரும் அதன் ஒதுக்கீட்டு வகைகளான பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மட்டும் குறிப்பிடப்படுகிறது.
இந்த மாற்றம் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்து மதத்தில் ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீடு வழங்கப்படுவதால், சான்றிதழ்களில் “இந்து” என்ற சொல்லும் சேர்க்கப்பட வேண்டும் என்பதே வானதி சீனிவாசனின் வாதம்.
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சமூகங்களும், தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பழங்குடியினர்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெறும் வகையில் இந்த மாற்றம் சதி நோக்குடன் செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகமும் அவர் எழுப்பியுள்ளார். எனவே, “இந்து” என்ற வார்த்தையை மீண்டும் சான்றிதழ்களில் சேர்க்க வேண்டும் என்றும், இந்த மாற்றமானது அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அதனை திமுக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.