WhatsApp Channel
ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்திக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஆர்த்தி தனது கணவரின் நண்பரான இளையராஜாவுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் இருவரையும் கண்டிக்கிறார், மேலும் ஆர்த்தி தனது காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு தேவகோட்டை அருகே கதலினி வயல் வனப்பகுதியில் மது குடிக்க அழைத்து சென்ற இளையராஜா, ஸ்ரீகாந்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொன்று புதைத்துள்ளார்.
இதையடுத்து, குடும்ப பிரச்னையால் கணவர் கோபித்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டதாக ஆர்த்தி சுமார் இரண்டரை ஆண்டுகளாக நாடகமாடி வந்துள்ளார். இதனிடையே ஸ்ரீகாந்த் கொலை குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டதும், அவரது மனைவி ஆர்த்தி, இளையராஜா மற்றும் அவரது நண்பர்கள் கொலையில் ஈடுபட்டது உறுதியானது.
இந்நிலையில் ஆர்த்தி, இளையராஜா மற்றும் அவரது நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post