WhatsApp Channel
ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி விவரம் வருமாறு;
2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சியில் சிறிது காலம் முதலமைச்சராகவும், வருவாய்த்துறை அமைச்சராகவும் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.அதிமுக ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஓபிஎஸ் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா மற்றும் சகோதரர்கள் உள்பட 7 பேர் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை தேனியில் நடந்தால் சரியாக இருக்காது என்று கருதி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த 2012-ம் ஆண்டு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்து, புகார்களுக்கு போதிய ஆவணங்கள் இல்லாததால், இந்த வழக்கை மேற்கொண்டு தொடரவில்லை எனக் கூறி புகாரை வாபஸ் பெறுவதாகக் கூறினர்.
அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேர் மீதான வழக்குகளில் இருந்து சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த வழக்கில், பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உத்தரவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முயற்சி எடுத்ததால் ஓ.பன்னீர்செல்வம் திகிலடைந்தார்.
இதனால், தன் மீதான சொத்து பரிமாற்ற வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, வழக்கின் தன்மை மற்றும் தகுதி அடிப்படையில் தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிப்பார் என்று கூறியது. இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்டு அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு உயர் நீதிமன்றத்தால் தூசி தட்டப்பட்ட சொத்து பரிமாற்ற வழக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வினருக்கு தெரியாமல் ஓ.பன்னீர்செல்வம் கலக்கத்தில் இருப்பதாகவும், இந்த வழக்கு தன்னையும் துரத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post