WhatsApp Channel
கடலூர், கோவை, வேலூர், சென்னை சிறைகளில் உள்ள மொத்தம் 12 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில், ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் 13.9.2021 அன்று ஆற்றிய உரையில், அண்ணாவின் 113வது பிறந்த நாளான 15.9.2021 அன்று, நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை குறைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை குறைத்து, முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க, ஓய்வுபெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையில் ஒரு குழு 11.1.2022 அன்று அமைக்கப்பட்டது.
கமிட்டியின் பரிந்துரையின்படி, கடலூர் மத்திய சிறையில் உள்ள 4 கைதிகள், கோவை மத்திய சிறையில் 6 கைதிகள், வேலூர் மத்திய சிறையில் ஒரு கைதி, சென்னை புழல் சிறையில் ஒரு கைதி என மொத்தம் 12 ஆயுள் கைதிகளை நிபந்தனையுடன் விடுதலை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post