ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் விரைவு ரயில்களில் சாதாரண பெட்டிகளை நீக்கி, அதற்கு பதிலாக ஏசி வசதி கொண்ட பெட்டிகளை அதிகரிக்கும் திட்டத்தைக் ரயில்வே துறை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை-திருவனந்தபுரம் மெயில், நீலகிரி, நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் குறைக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக ஏசி வசதி உள்ள பெட்டிகளை சேர்க்கும் முடிவை ரயில்வே துறை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறியுள்ளார்.

சாதாரணமாக 7 முதல் 9 வரை படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இருந்தாலும், தற்போது அதில் இரண்டை அகற்றிக் குளிரூட்டி பெட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் பயணிகளை எண்ணிக்கை குறையாத போதிலும், அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். இது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் மக்களுக்கு அதிக சுமையாக அமையும்.

பேருந்து கட்டணத்தை விட ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணம் குறைவாக உள்ளதனால், ஏழை மக்கள் பெருமளவில் ரயில்கள் மூலமாக பயணம் செய்கின்றனர். உதாரணமாக, சென்னை முதல் கோவை வரை படுக்கை வசதி பெற்ற பெட்டியில் ரூ.325 மட்டுமே வசூலிக்கப்படுகிறது, ஆனால் அதே தூரத்திற்கு ஏசி 3ஆம் வகுப்பு பெட்டியில் ரூ.835 வசூலிக்கப்படுகிறது. இதேபோல் திருநெல்வேலி செல்ல ரூ.395 ஆக இருந்தால், ஏசி பெட்டியில் ரூ.1,040 கட்டணமாகவே உள்ளது.

சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைவதால் பொதுமக்கள் கட்டாயம் ஏசி வகுப்புகளை தேர்வு செய்ய வேண்டியதாகின்றனர், இது அவர்களுக்குப் பாரிய சுமையைக் கொடுக்கும். ஏசி வகுப்புகளுக்கான மானியமும் குறைவாகவே வழங்கப்படுகிறது. அதிக வருமானம் ஈட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மக்களுக்குச் சேவை செய்வதற்காக அமைக்கப்பட்ட ரயில்வே துறையில் லாப நோக்கம் இருக்கக்கூடாது. எனவே, ஏழை மக்களை பாதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தை ரயில்வே துறை உடனே கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Facebook Comments Box