நயினார் நாகேந்திரன் இல்லத்தில் பழனிசாமிக்கு சிறப்பு விருந்து
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் இல்லத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நேற்று இரவு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சாரப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பழனிசாமி, நேற்று முன்தினம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து நெல்லை சந்திப்பில் உள்ள ஓட்டலில்தான் அவர் இரவுநேர தங்குமிடமாக இருந்தது.
சுதந்திரத் தியாகி தீரன் சின்னமலையின் 220-வது நினைவு நாளையொட்டி, அவரது உருவப் படத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் பழனிசாமி.
அதன்பின், நேற்று இரவு நெல்லையில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் வீட்டில் பழனிசாமிக்காக 109 வகையான உணவுகள் கொண்ட விருந்துக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பாஜக மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும், எதிர்வரும் தேர்தலை நோக்கி வியூகம் வகுப்பது, பிரச்சாரப்பயணத்தில் பங்கேற்பது உள்ளிட்ட விடயங்களை கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை செய்தார். இன்று (ஆக. 4) திருநெல்வேலி, நாங்குநேரி மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளில் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் பின், ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தென்காசி மாவட்ட மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். பின்னர் அவர் விருதுநகர் மாவட்டத்துக்குச் செல்கிறார்.