பிரதமர் குறித்து விஜய் பேசிய வார்த்தைக்கு பாஜக நிர்வாகிகள் கண்டனம்
மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய், பிரதமரை ‘மிஸ்டர் பி.எம்.’ என்று குறிப்பிட்டதற்கு பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, சரத்குமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் பாஜக தலைவர்கள் அளித்த விளக்கம்:
அண்ணாமலை:
“2026 தேர்தலில் தவெக–திமுக இடையே போட்டி என்று விஜய் கூறியுள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் பிரதான எதிரி திமுக எனச் சொல்வது மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், விஜய் தனது பலத்தைப் பற்றி ஒன்றும் பேசவில்லை, மற்றவர்களின் பலவீனத்தை மட்டுமே எடுத்துரைத்துள்ளார்.
விஜய் மாநாடு நடத்தலாம். ஆனால், மக்கள் வாக்களிக்கும் போது, அவர் அரசியலில் 5 ஆண்டுகள் தாக்குப்பிடிப்பாரா என்று யோசிப்பார்கள். முதல்வரை ‘அங்கிள்’ என்று அழைத்தது சரியல்ல; பொது இடத்தில் பக்குவமாகப் பேச வேண்டும். தமிழக மக்கள் பாஜகவை வலுவான கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 18 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.”
தமிழிசை சவுந்தரராஜன்:
“உலக அளவில் பிரதமர் மோடி புகழ் பெற்றுக் கொண்டிருக்கும்போது, யாராவது ஒருவர் ‘மிஸ்டர் பி.எம்.’ என்று கூறினால் மக்கள் ரசிப்பதில்லை. எழுதிக் கொடுத்தபடி, ‘அங்கிள், மிஸ்டர் பி.எம்.’ என்று விஜய் பேசினார். அவருக்கு அரசியல் ஞானம் இல்லை என்பதற்கான சான்று கச்சத்தீவைப் பற்றிய பேச்சே. ஒரு கொடியைச் சரியாக நடக்க முடியாதவர்கள், மாநாட்டைச் சரியாக நடத்த முடியாதவர்கள், எப்படி ஆட்சியை நடத்துவார்கள்?”
ஹெச்.ராஜா:
“தேவையில்லாமல் பாஜக குறித்து விஜய் பேசியுள்ளார். முதலில் அவர் தமிழக அரசியலைப் படிக்க வேண்டும். தமிழக ரசிகர்களை பயன்படுத்தி பணம் சம்பாதித்ததைத் தவிர, தமிழகத்துக்காக அவர் என்ன செய்துள்ளார்? பாஜக கொள்கைக்கு எதிரி என்கிறார்; அவருக்கே என்ன கொள்கை இருக்கிறது? பாஜகவை தவறாக விமர்சிக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன்.”
சரத்குமார்:
“நடிகர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக இளைஞர்கள் அரசியலுக்குள் வரவேண்டும். ஆனால், அரசியலைப் படித்து, புரிந்து கொண்டு, கொள்கை ரீதியாக பேச வேண்டும். ‘மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்’ என்று சொல்லும் நிலைக்கு விஜய் இன்னும் வளரவில்லை.”