சாலை வசதிக்கு மத்திய அரசு விடுவித்த ரூ.2,043 கோடி எங்கே? – அண்ணாமலை கேள்வி
தமிழகத்தில் சாலை வசதிக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.2,043 கோடி எங்கே சென்றது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உடுமன்பாறை பகுதியில் சாலை இல்லாததால், உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவரை மலைவாழ் மக்கள் தொட்டிலில் கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அண்ணாமலை, “வால்பாறை உடுமன்பாறை கிராமம் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு குடியிருப்பும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளதாக திமுக அரசு கூறிவந்தாலும், சாலை வசதி இல்லாததால், மருத்துவ சிகிச்சைக்காக முதியவர் ஒருவரை மக்கள் தொட்டிலில் கட்டி அழைத்துச் செல்வது மிகுந்த வேதனையை தருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சாலை வசதிக்காக மத்திய அரசு விடுவித்த ரூ.2,043 கோடி எங்கே போனது?” என்று குறிப்பிட்டுள்ளார்.