கோவையில் 10 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும்: வானதி சீனிவாசன் நம்பிக்கை
சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை செட்டி வீதியில் இன்று நடைபெற்ற ‘நலம்’ மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் இரண்டு வார காலம் மக்களுக்கான பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கோவை தெற்கு தொகுதியில் 43-வது மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளை அருகிலுள்ள அரசுப் பள்ளி, சமூக கூடங்களில் நடத்த அனுமதி கேட்டும் வழங்கப்படவில்லை. மரக்கன்று நடுதல் போன்ற எங்கள் செயல்பாடுகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஆளும் கட்சியினர் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்குகின்றனர்.
ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது. சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தற்போது குடிநீர் 12 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. காரணம் கேட்டால் சிறுவாணி அணையில் நீர் இல்லை என்று கூறப்படுகிறது. அந்நிலையைத் தீர்க்க அணையை தூர்வாரி நீர்மட்டத்தை அதிகரிக்க திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆளும் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன தடங்கல்? நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு நடைபெற்றது. 2026-ல் திமுக-வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். திமுகக்கு எதிராக உள்ளவர்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். ஆனால் விஜய் பேசும் விஷயங்களை முழுமையாக அறிந்து கொண்டு தான் பேச வேண்டும். வெட்கிரைண்டர் தொடர்பான ஜிஎஸ்டி வரி குறைப்புக்காக தொழில் அமைப்பினருடன் ஆலோசனை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணாமலை உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். சென்னை கூட்டத்தில் அவரை சந்தித்து பேசினேன். கோவையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம் தொடர்பாக முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால், அவற்றை தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.