‘விஜய் அரசியலுக்கு வந்தார்; அரசியலில் இருந்த முதல்வர் ஷூட்டிங் சென்றார்’ – தமிழிசை
விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், அரசியலில் இருந்து தமிழக முதல்வர் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திராஜன் விமர்சனம் செய்தார்.
முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜிஎஸ்டி மறு சீரமைப்புக்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். பாஜக – அதிமுக கூட்டணி பலமாக உள்ளது. காங்கிரஸ் – திமுக – விடுதலை சிறுத்தைகள் கூட்டணியின் அங்கீகாரம் போய்விட்டது. மக்கள் நீதி மையம், கொங்கு கட்சி, ஜவாஹிருல்லா கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. எங்களைப் பார்த்து பயப்படுவதாக சொன்னார்கள்.
காங்கிரஸ் அதிகார பகிர்வு வேண்டும் என கூறுகிறது. திருமாவளவன் ஏற்கனவே சொல்லிவிட்டார். கம்யூனிஸ்டுகள், உழைப்பாளர்கள் என கூறி, தற்போது பெட்டி பாம்பாய் அடங்கிவிட்டனர். தேர்தல் நெருங்கும்போது தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும். இண்டியா கூட்டணி உதிரும்.
தம்பி விஜய் இரண்டு-மூன்று நாட்களாக பெரிய கூட்டங்களை நடத்துகிறார். அவருக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ஸ்கிரிப்ட் எழுதி தரும் தம்பியிடம் சரி பார்த்து எழுதிக்கொடுக்க வேண்டும். மீனவர்களைப் பற்றி சொல்லும்போது பிரதமர் வந்த பிறகு 3,700 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தூக்கு தண்டனையிலிருந்து மீனவர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.
விஜய் வசனகர்த்தாவை மாற்றவேண்டும். 75 ஆயிரம் ரயில் பெட்டி பெரம்பூர் தொழிற்சாலையில் பாரத் ரயிலுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பற்றி தம்பி சொல்கிறார். அவரது ஸ்கிரிப்ட் சரி பார்க்க வேண்டும். சந்தேகம் இருந்தால், நம்பகமானவர்களிடம் சரித்திரத்தை கேட்டுக்கொள்ளலாம்.
அரசியலுக்கு திடீரென வந்தவுடன் அவர் என்ன செய்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை. கூட்டத்துக்கு வருபவர்களும் அவரைப் பார்க்க வருகின்றனர்; வாக்களிக்க வரவில்லை.
ஒரு விஷயத்தில் நான் விஜயுடன் உடன்படுகிறேன்: முதல்வர் வெளிநாட்டுக்கு முதலீடு ஈர்க்க செல்கிறாரா, முதலீடு செய்கிறாரா என்பதை ஏற்றுக்கொள்ளலாம். அவர் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும்; திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஜிஎஸ்டியில் மக்கள் பலன் பெறப்போகிறார்கள். ஆனால் கலர் கலராக சட்டை போட்டுக் கொண்டு ஷூட்டிங் நடத்துகின்றனர். ஒரே வித்தியாசம், விஜய் அரசியலுக்கு வந்தார்; அரசியலில் இருந்த முதல்வர் ஷூட்டிங் சென்றார்.
மாணிக்கம் தாகூர் குறித்து விருதுநகரில் கேளுங்கள், அவர் மக்களுக்கு உதவி செய்கிறார் என்பது தெரியும்.
செல்வப் பெருந்தகை, திருமாவளவன் ஸ்டாலினை பார்க்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அமித்ஷாவை பார்த்தால் குறை சொல்கிறார்கள். கூட்டணி இருந்தால் கட்சி தலைவர்கள் பேச வேண்டும்; இதில் ஆச்சரியம் ஏன்? நானும் தம்பி விஜய பாஸ்கரும் விமான நிலையத்தில் பேசினோம். இரண்டு கூட்டணி தலைவர்கள் பேசுவது இயல்பு.
இதை செயற்கையாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; எதிர்க்கட்சியைப் பார்த்து பயந்துள்ளனர். பிரச்சாரத்தின்போது, விஜய் முருகன் வேலை கையில் வாங்கும்போது காலணியை கழற்றாமல் வாங்கினார். ஆரம்பகாலம் என்பதால் அவருக்கு தெரியவில்லை. மக்கள் உணர்வை அவர் புரிந்து கொள்ள வேண்டும். தொண்டர்களுக்கும் அவர் சொல்லிக் கொடுக்கவேண்டும்.