“கல்வி நிகழ்ச்சியில் நடிகர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழக அரசின் கல்வி நிகழ்வில் நடிகர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் அரசு சுய விளம்பரம் செய்கிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகளான கேசவ விநாயகம், பொன். ராதாகிருஷ்ணன், பொன். பாலகணபதி உள்ளிட்டோருடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார். 2 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் டெல்லி பயணம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம் ஆகியோருடன் நடந்த சந்திப்பு, டிடிவி தினகரனின் கருத்துக்கள் ஆகியவை விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரிவர இல்லை. கல்வியில் மாநிலம் பின்தங்கியுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து விழா நடத்தி அரசு விளம்பரம் செய்கிறது. கல்வித் துறையில் 4,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. அதை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு சிறப்பாக செயற்படுகிறது என வார்த்தைகளில் கூறினாலும், நடைமுறையில் அப்படியில்லை. கல்வி நிகழ்வில் நடிகர்கள், இயக்குநர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் அரசு தன்னை விளம்பரப்படுத்துகிறது” என்றார்.

மேலும், “காமராஜர் ஆட்சியை அமைப்போம் என காங்கிரஸ் கூறுகிறது. அது சாத்தியமா என்பது தெரியாது. சி.வி. சண்முகத்தைச் சந்தித்தது ஆச்சரியம் அல்ல. அவர் வீட்டின் வழியாகச் சென்றபோது நேரில் சந்தித்தேன். கூட்டணி விவரங்கள் டிசம்பர் மாதத்துக்குள் வெளியாகும். கூட்டணியை வைத்து மக்கள் வாக்களிப்பதில்லை. 2001-ல் திமுக வலுவான கூட்டணியை அமைத்தும் அதிமுக வென்றது. அதேபோல் 1980 தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்டும் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார்” எனவும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து, *“அக்டோபர் 12-ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பு தொடங்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்த பின் ஆரம்பிக்கிறோம். பின்னர் மதுரையிலிருந்து பயணம் தொடரும். இதில் பாஜக தேசியத் தலைவர் நட்டா பங்கேற்கிறார். திமுக அரசை மக்கள் விரும்பவில்லை. பணம் கொடுத்தாலும் மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். கூட்டணி மாறும் என்று கடம்பூர் ராஜு சொல்லவில்லை; மற்ற கட்சிகள் சேரலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

சட்டம் – ஒழுங்கை டேவிட்சன் தேவாசீர்வாதம் பாதிக்கிறார். மது, கஞ்சா போன்ற பழக்கங்களை அரசு கட்டுப்படுத்த முடியவில்லை. ஓட்டு வங்கி நோக்கில் அரசு செயற்படுகிறது. விரைவில் இந்த அரசு வீழ்ச்சி அடையும். நிரந்தர பணி உறுதி அளித்தும், அனைத்தும் ஒப்பந்த அடிப்படையாக மாறிவிட்டது. மக்களை ஏமாற்றி ஓட்டு பெற்ற அரசு இது. காங்கிரஸ் திமுகவை நம்பினால் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். திமுக காங்கிரஸிலிருந்து பலரை தங்கள் பக்கம் இழுக்கிறது.

வெளிநாட்டு முதலீடு குறித்த வெள்ளை அறிக்கையை பலமுறை கேட்டும் வழங்கவில்லை. கேள்வி எழுப்பினால் டிஆர்பி ராஜா வெறும் காகிதத்தையே காட்டுகிறார். இது ஜனநாயகமற்ற செயல். இந்த அரசு வெற்றுக் காகித அரசாக உள்ளது”* என குற்றம்சாட்டினார்

Facebook Comments Box