காங்., திமுக புதுச்சேரிக்கு ஆபத்தான வைரஸ்: பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் விமர்சனம்
காங்கிரஸ், திமுக புதுச்சேரி மக்களுக்கு மிகவும் ஆபத்தான வைரஸ் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி அந்த வைரஸை தடுக்கும் தடுப்பூசி என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கேசவன் விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் இன்று புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீர்த்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி கடந்த 22-ம் தேதி அமலுக்கு வந்தது.
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் தீபாவளி பரிசு கொடுக்கிறோம் என்றார். ஆனால் அவர் தீபாவளி பரிசு கொடுக்கவில்லை. நவராத்திரி பரிசு கொடுத்துள்ளார். தீபாவளி, நவராத்திரி என்றாலே திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வெறுப்பு. திமுக தமிழகம் மற்றும் புதுச்சேரி எந்த மாநிலமாக இருந்தாலும் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை. மற்ற மதங்களுக்கு வாழ்த்து சொல்வார்கள்.
பிரதமரின் ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்தை பொருத்தவரை மக்கள் மையமாகக் கொண்டது. இது கூட்டாட்சி, நாடாளுமன்ற ஜனநாயகம் பெரிதாக வலுப்படுத்துவதற்கு எடுத்துக்காட்டு. ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசு மட்டுமல்ல, மாநில நிதியமைச்சர்கள் எல்லோரும் மனதாக சீர்த்திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க ஜிஎஸ்டி, சுய சார்பு இந்தியா இரண்டும் அடித்தளம் என்று பிரதமர் கூறியுள்ளார். எப்போதும் இந்தியாவின் பொருளாதாரம் இவ்வளவு சிறப்பாக இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தவறான பொருளாதார கொள்கைகள், ஊழல், லஞ்சம் போன்றவைகள் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்தது.
ஆனால் தற்போது உலகில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்தை காங்கிரஸ் கட்சி செய்ய முடியவில்லை. காரணம் மாநில அரசுகள் அவர்களால் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் தற்போது ஜிஎஸ்டி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தில் இந்தியாவை 3-வது இடத்திற்கு கொண்டு வரும்.
இந்த ஜிஎஸ்டி குறைப்பு எல்லா மக்களுக்கும் வரப்பிரசாதமாக உள்ளது. புதுச்சேரி மக்களைப் பொருத்தவரை மிகவும் தெளிவாக இருக்கின்றது. காங்கிரஸ்-திமுக புதுச்சேரி மக்களுக்கு மிகவும் ஆபத்தான வைரஸ். அதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அந்த வைரஸை தடுக்கும் தடுப்பூசி. இந்த தடுப்பூசிக்கு மக்களின் பேராதரவு எப்போதும் இருக்கும். ஜிஎஸ்டி மக்கள் வாழ்க்கையில் பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் என்று அவர் கூறினார்.
ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களுடன் பாஜகவுடன் இல்லை: மாநில தலைவர் ராமலிங்கம் கூறியதாவது, பாஜக இரண்டாம் தர அரசியல் செய்ய விரும்பவில்லை. கூட்டணி கட்சியோடு எப்போதும் பயணிப்போம். கூட்டணி தர்மத்தை மீற மாட்டோம். 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் தாமாகவே பாஜகவிற்கு ஆதரவு வழங்கினர்.
ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அவர்களின் நிலைப்பாடு தெரிந்துவிட்டது. ஆகையால் பாஜகவிற்கு அவர்களது ஆதரவு இல்லை. நாங்களும் அவர்களை அழைக்க மாட்டோம். அவர்களோடு எந்தவித தொடர்பும் இல்லை. ஜே.சி.எம் மக்கள் மன்றம் பாஜகவின் பி டீம் அல்ல; அதை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்.
தேசிய தலைமை என்.ஆர்.காங்கிரஸ்-அதிமுக கூட்டணி தான்; ஜே.சி.எம் மக்கள் மன்றத்தோடு யாரும் தொடர்பில் இருந்தால் விலக்கப்படுவார்கள் என்று கொள்கை.
நிச்சயமாக ஜே.சி.எம்-ஐ பாஜக ஆதரிக்க மாட்டாது. அமைச்சர் ஜான்குமார் ஜே.சி.எம் மக்கள் மன்றத்துடன் தொடர்பில் இருப்பதை தலைமைக்கு தெரிவித்துள்ளார்; அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். பிரதமரின் பிறந்த நாள் நலத்திட்ட விழாவிற்கு துணைநிலை ஆளுநர் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்; இதை தேசிய தலைமை கவனத்தில் கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.