‘கரூர் சம்பவத்திற்கு முழு பொறுப்பை ஏற்க வேண்டும்’ – முதல்வர் ஸ்டாலினிடம் பாஜக எம்.பி.க்கள் கடிதம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விரிவான விளக்கத்தை கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:

“கரூரில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்ததும், காயமடைந்ததும் குறித்து ஆழ்ந்த கவலை மற்றும் வேதனையுடன் எழுதுகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டது மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தது. மக்கள் மிகவும் அதிர்ச்சியடைகிறார்கள். பாதிக்கப்பட்டோரின் மனதில் இந்த நிகழ்வின் காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த சூழ்நிலையில், நீங்கள் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பின்வரும் அம்சங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை விரைவில் வழங்க வேண்டும்:

  1. சம்பவத்தின் முதன்மை காரணங்கள்: கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட காரணமான முக்கிய அம்சங்கள் மற்றும் நிகழ்வுகளின் வரிசை என்ன?
  2. கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள்: நிகழ்வுக்கு முன் மற்றும் பின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், நிர்வகிக்கவும் நிர்வாக மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் எவ்வாறு நடவடிக்கை எடுத்தன?
  3. காரண பகுப்பாய்வு: ஆரம்பத் தேடலின் படி, தடுப்பு நடவடிக்கைகள் இருந்த போதும் இந்த சம்பவம் நிகழ காரணமான குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன?

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பான நடவடிக்கைகளை மாநில அரசு எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதையும் பகிரவும். சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காலவரையறை உள்ளதா என்றும், சம்பவத்தில் கண்டறியப்பட்ட உண்மைகள் பற்றியும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இந்தக் கடிதத்தில் அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட நகலை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்கும் பகிர்ந்துள்ளனர். இச்சம்பவத்தில் பொறுப்புடன் நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களின் கேள்விகளுக்கு துறை வாரியாக விரிவான பதில்களை அளிக்கவும் கடிதம் கோருகிறது” என்று அனுராக் தாக்குர் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box