திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றங்கள் தக்க பாடம் கற்பித்துள்ளன – அண்ணாமலை விமர்சனம்

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகமும், அரசியல் காழ்ப்புணர்வும் இன்று நீதித்துறையால் முறையாக கண்டனத்துக்குள்ளாகியுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில்,

“டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்தி வருகின்றன. இன்று உச்ச நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும் திமுக அரசுக்கு தக்க பாடம் கற்பித்துள்ளன,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை தனது பதிவில் எடுத்துக்காட்டிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1️⃣ திமுக எம்எல்ஏவின் மருத்துவமனை – கிட்னி திருட்டு வழக்கு:

இந்த வழக்கில் விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த குழுவில் தாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என திமுக அரசு நிபந்தனை விதித்தது. இதை ஏற்காமல், உச்ச நீதிமன்றம் அந்த நிபந்தனையை நிராகரித்தது. இது திமுகவின் வெட்கக்கேடான நடவடிக்கை என அண்ணாமலை கூறியுள்ளார்.

2️⃣ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திமுக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. “சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் பயப்படுகிறது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

3️⃣ கரூர் தவெக் பேரணி கூட்ட நெரிசல் வழக்கு:

இந்த வழக்கில் தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. “கரூர் சம்பவம் மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டபோது, சென்னை உயர் நீதிமன்றம் எவ்வாறு தலையிட்டது?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

4️⃣ திருப்பரங்குன்றம் வழக்கு:

மாறுபட்ட நீதிபதிகளின் தீர்ப்புகளுக்குப் பிறகு, மூன்றாவது நீதிபதியான விஜய் குமார், நீதியரசர் ஸ்ரீமதியின் கருத்துடன் இணைந்து, சிக்கந்தர் தர்காவில் விலங்குகளை பலியிடுவதைத் தடை செய்துள்ளார். மேலும் அந்த மலையை “திருப்பரங்குன்றம் மலை” என்றே அழைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை தனது பதிவில்,

“ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுக அரசைத் துரத்தி வருகிறது,” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Facebook Comments Box