WhatsApp Channel
இஸ்ரேல் ராணுவத்தின் கொடூர தாக்குதலால் காசா நகரம் துண்டாடப்படுகிறது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த மாதம் 7ஆம் தேதி போர் மூண்டது. 4 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா மற்றும் பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இஸ்ரேல் அதற்கு செவிசாய்க்க மறுத்து, ஹமாஸ் அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதாக சபதம் செய்து நாளுக்கு நாள் போரை தீவிரப்படுத்தி வருகிறது.
போர் தொடங்கியதில் இருந்து காசா மீது தொடர்ந்து வான் மற்றும் கடல் குண்டுவீச்சுகள் மூலம் இஸ்ரேலிய தரைப்படை கடந்த 4 நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து காசா நகரின் புறநகர் பகுதிகளை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.
இப்படியாக வான், கடல், நிலம் என 3 வழிகளிலும் இஸ்ரேல் ராணுவத்தின் அட்டூழிய தாக்குதலால் காசா நகரம் துண்டாகி வருகிறது. காசா இதுவரை கண்டிராத கொடிய மற்றும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை இந்தப் போர் ஏற்படுத்துகிறது.
காசாவில் உள்ள ஹமாஸ் இலக்குகளை மட்டுமே குறிவைப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படும் அவலம் தொடர்கிறது.
இந்நிலையில் காசாவில் உள்ள 8 அகதிகள் முகாம்களில் மிகப்பெரிய ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் பல குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும், இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை.
காசாவில் நடந்த போருக்குப் பதிலடியாக இஸ்ரேலுக்கான தனது தூதரை “உடனடியாக அமலுக்கு வரும் வகையில்” திரும்பப் பெறுவதாக ஜோர்டான் அறிவித்துள்ளது. மேலும் அது இஸ்ரேலை “முன்னோடியில்லாத மனிதாபிமான பேரழிவை” உருவாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளது.
“காசாவில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலியப் போருக்கு” அம்மானின் கண்டனத்தைப் பிரதிபலிக்கும் வகையில், “வெளியுறவு அமைச்சர் அய்மன் சபாடி இஸ்ரேலுக்கான ஜோர்டானின் தூதரை உடனடியாகத் திரும்பப் பெற முடிவு செய்தார்” என்று ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் இஸ்ரேல் தனது கொடூர தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே அதன் தூதர் திரும்புவார் என்று அமைச்சகம் கூறியது.
Discussion about this post