WhatsApp Channel
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 5 வது நாளில் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளில் 15 பேர் பெண்கள் மற்றும் 15 பேர் சிறுவர்கள்.
அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியும், எல்லைப் பகுதியை சூறையாடியும் வன்முறையில் ஈடுபட்டது. 240 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.
இரு தரப்புக்கும் இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த போரில் 14,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 2,700 பேர் காணாமல் போயினர். இந்த மோதலில் இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், எகிப்து, அமெரிக்கா, கத்தார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்த முயற்சியின் பலனாக இஸ்ரேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டன. இதன்படி, கடத்தப்பட்ட 240 பேரில் 50 பெண்கள் மற்றும் குழந்தைகள் 4 நாட்களில் அடுத்தடுத்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் இதனால் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் 4 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் 13 மற்றும் பின்னர் 17 பிணைக் கைதிகள் ஹமாஸால் அடுத்தடுத்த நாட்களில் விடுவிக்கப்பட்டனர். 4வது நாளில் 11 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது.
இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கத்தாரின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் விளைவாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் பணயக்கைதிகளை விடுவிக்கும் வாய்ப்பு தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தம் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டதால், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 5வது நாளான நேற்று இஸ்ரேல் சிறைகளில் இருந்து 30 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதை இஸ்ரேல் சிறைத்துறை உறுதி செய்துள்ளது என்று டைம்ஸ் ஆப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கத்தார் வெளியிட்டுள்ள செய்தியில், விடுவிக்கப்பட்ட கைதிகளில் 15 பேர் பெண்கள் மற்றும் 15 பேர் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள். ஆறு நாள் போர் நிறுத்தத்தின் 5வது நாளான நேற்று காசாவில் இருந்து 12 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் வெளிநாட்டினர். இதில் வயதானவர்களும் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர்.
60 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் காஸாவிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 180க்கும் மேற்பட்டோர் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவும், ஹமாஸ் அமைப்பை அழிக்கவும், காசா இனி இஸ்ரேல் மக்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் பாடுபடுவேன் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று தெரிவித்தார்.
Discussion about this post