WhatsApp Channel
சபரிமலையில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதையொட்டி ஆன்லைனில் முன்பதிவு செய்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
சபரிமலையில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். இதேபோல், மண்டல மகரவிளக்கு சீசன், பங்குனி உத்திரம் விழா நாட்கள், விஷு, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களில், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கும்.
இந்நிலையில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். பின்னர் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் முடிந்து இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
நாளை (11ம் தேதி) வழக்கமான பூஜைகளுடன் காலை 5 மணி முதல் 18ம் தேதி வரை 8 நாட்கள் சிறப்பு பூஜையும், நேயாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, சஹஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட ஆராதனைகளும் நடக்கிறது. முன்னதாக 14-ந்தேதி விஷு பண்டிகை தினத்தில் அதிகாலை 3 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அன்றைய தினம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தந்திரி, மேல் சாந்தி ஆகியோர் காசுகளை வழங்குவார்கள். சன்னிதானத்தில் கனி கனல் சடங்குகளும் செய்யப்படுகின்றன. சபரிமலையில் வரும் 18ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். உடனடி தரிசன முன்பதிவுக்காக நிலக்கல்லில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கனூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து கேரள அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
Discussion about this post