WhatsApp Channel
COP-28 உலக காலநிலை உச்சி மாநாடு துபாய் எக்ஸ்போ சிட்டி வளாகத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
உலகளாவிய பருவநிலை மாற்ற சவால்களுக்கு தீர்வு காண உறுப்பு நாடுகளில் ஐ.நா.வின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று துபாய் எக்ஸ்போ சிட்டி வளாகத்தில் கோப்-28 உலக காலநிலை உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கியது.
இந்த மாநாட்டுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரும் COP-28 மாநாட்டின் தலைவருமான டாக்டர் சுல்தான் ஜாபர் தலைமை தாங்கினார். ஐநா உச்சி மாநாடு வளாகத்தின் நீல மண்டலத்தில் பல்வேறு நாடுகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு இந்தியா மன்றத்தை தொடங்கி வைத்தார்.
இந்திய பெவிலியன் திறப்பு விழாவில் மத்திய அமைச்சருடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் துபாய் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், துபாயில் தரையிறங்கிய பிரதமர் மோடி தனது எக்ஸ் இணையதளத்தில், “காப்-28 மாநாட்டில் பங்கேற்பதற்காக துபாய் வந்துள்ளேன். சிறந்த கிரகத்தை உருவாக்குவதற்கான உச்சி மாநாட்டின் நடவடிக்கைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், பிரதமர் மோடி, “துபாயில் உள்ள இந்திய சமூகத்தின் அன்பான வரவேற்பால் ஆழ்ந்து தொட்டது. அவர்களின் ஆதரவும் உற்சாகமும் நமது துடிப்பான கலாச்சாரம் மற்றும் வலுவான பிணைப்புகளுக்கு சான்றாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ஐநா உலக காலநிலை மாநாடு வரும் 12ம் தேதி வரை நடக்கிறது.
Discussion about this post