WhatsApp Channel
நாளை நேரில் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு சேலம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதில், தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். இது இரு மதத்தினரிடையே மோதலை தூண்டுவதாக கூறி சேலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவர் தொடர்ந்தார். இதை விசாரித்த சேலம் நீதிமன்றம், அண்ணாமலை நாளை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி அண்ணாமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனது பேச்சு தவறாக பேசப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இதுவரை பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இரு மதங்களுக்கு இடையே மோதலை தூண்டும் எண்ணம் எனக்கு இல்லை. எனவே, சேலம் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. இதில், அண்ணாமலை மீதான சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தார். மேலும் விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Discussion about this post