WhatsApp Channel
பரபரப்பான அரசியல் சூழலில் நாளை நாடாளுமன்றம் கூடுகிறது. 1-தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் அமர்வு என்பதால், முதல் நாளில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே இந்தத் தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.
பீகாரில் ஆட்சி மாற்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் என பரபரப்பான சூழலில் நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறுவதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
Discussion about this post