WhatsApp Channel
தரிசனம் முடித்து திருவனந்தபுரம் வந்த போது இந்த அதிர்ஷ்ட டிக்கெட்டை வாங்கியதாக புதுச்சேரியை சேர்ந்த பக்தர் ஒருவர் தெரிவித்தார்.
கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 24ம் தேதி நடைபெற்றது. அந்த லாட்டரியின் ஒரு சீட்டின் விலை ரூ.400. மொத்தம் 45 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின. இந்த டிராவில் முதல் பரிசாக எக்ஸ்சி 224091 என்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.20 கோடி கிடைத்தது.
இந்த எண் கொண்ட லாட்டரி சீட்டை பாலக்காட்டில் உள்ள மொத்த வியாபாரி ஒருவரிடம் வாங்கி திருவனந்தபுரத்தில் உள்ள கடையில் விற்பனை செய்தது உறுதியானது. ஆனால் முதல் பரிசை வென்ற அதிர்ஷ்டசாலி யார்? என்ற விவரம் தெரியவில்லை.
இந்நிலையில், சபரிமலைக்கு வந்த புதுச்சேரியைச் சேர்ந்த 33 வயது பக்தர் ஒருவர், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்கு தரிசனம் முடித்துக் கொண்டு வந்தபோது இந்த அதிர்ஷ்ட டிக்கெட்டை வாங்கியதாக கூறினார். மேலும் தனது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் அவரது பெயரை வெளியிட கேரள லாட்டரி இயக்குனரகமும் மறுத்துவிட்டது. நேற்று மதியம் 2.30 மணியளவில் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு தனது நண்பர்களுடன் வந்த வாலிபர் முதல் பரிசு பெற்ற லாட்டரி சீட்டை அலுவலகத்தில் கொடுத்து சான்றிதழ் பெற்றுள்ளார். ரூ.20 கோடி பரிசுத் தொகையில் அதிர்ஷ்டசாலி ஐயப்ப பக்தருக்கு ரூ.12.60 கோடி வரிவிலக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
Discussion about this post