WhatsApp Channel
இண்டி கூட்டணி முடிந்துவிட்டதாகவும், அந்த கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைப்பது பிடிக்கவில்லை என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவுடன் முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சி செய்து வந்தார். கட்சித் தலைவர்களுடனான கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பின்னர் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.
இந்நிலையில், நிதிஷ்குமாருக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருப்பதாக லாலு பிரசாத் கூறியிருந்தார். இதுகுறித்து நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இந்திய கூட்டணி ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், அந்த கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைப்பதை தான் விரும்பவில்லை என்றும், அதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறினார். கூட்டணிக்காக எவ்வளவு காலம் உழைக்க முடியுமோ அவ்வளவு காலம் உழைத்தேன், ஆனால் இப்போது எல்லாம் முடிந்துவிட்டது என்றார்.
லாலு பிரசாத் யாதவ் உடனான தனது உறவு சரியாக இல்லை என்றும் அதனால் தான் பிரிந்ததாகவும் அவர் தெரிவித்தார். பீகார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் நிதிஷ்குமார் கூறினார்.
Discussion about this post