WhatsApp Channel
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில மத்தியக் குழுக் கூட்டம் மார்ச் 4ஆம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி சென்னை வரும் நாளில் இந்த கூட்டம் நடைபெறும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில மத்தியக் குழுக் கூட்டம் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நாளை (மார்ச் 4) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி வியூகம், தேர்தல் அறிக்கை போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழகம் வந்தார். அரசு விழாக்களில் கலந்துகொண்டு பாஜக பொதுக்கூட்டங்களில் பேசினார். இந்நிலையில், மார்ச் 4ம் தேதி மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.மார்ச் 4ம் தேதி சென்னையில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களையும் பங்கேற்க வைக்க தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. பல்லடம் கூட்டத்தில் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், தேவநாதன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்டோர் ஏற்கனவே பங்கேற்றிருந்தனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை பாஜக தலைமையிலான கூட்டணியில் சேர்க்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ்ஸும் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் தினகரனுடன் சீட் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 4 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதியை ஜி.கே.வாசன் கேட்டதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என தெரிகிறது. பாரிவேந்தர், ஏசி சண்முகம், தமிழருவி மணியன், தேவநாதன், ஜான் பாண்டியன் ஆகியோருக்கு தலா ஒரு சீட் ஒதுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பரபரப்பான கூட்டணி பேச்சுகளுக்கு இடையே, பா.ஜ.,வின் மாநில மத்திய குழு கூட்டம் நடைபெறுவதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தேமுதிக, பாமகவை கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சி செய்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் சேர இரு கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் பா.ஜனதாவின் அடுத்த கட்ட நடவடிக்கை மார்ச் 4-ம் தேதிக்கு பிறகு தெரியவரும்.
மேலும் மோடி உரையாற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்பார் என கூறப்படுகிறது.பிரசார கூட்டங்கள் நடத்துவது குறித்தும் மத்திய குழு ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.
Discussion about this post