WhatsApp Channel
மக்களவை தேர்தலுக்கு நாடு முழுவதும் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்துவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் 2 தேர்தல் கமிஷனர்கள் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்.எஸ்.சந்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்து வருகிறார்.
நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 1.50 கோடி தேர்தல் பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும், 2100 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலை விட, 6 சதவீதம் ஓட்டுகள் அதிகம். 49.7 கோடி ஆண் வாக்காளர்களும், 47.1 கோடி பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். நாடு முழுவதும் 1.82 கோடி முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. பல அரசியல் தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ரத்து செய்துவிட்டு வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்த லோக்சபா தேர்தல் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடத்தப்படும் என்றும், 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post