WhatsApp Channel
ஜனார்த்தன ரெட்டியின் வருகை நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பலம் சேர்க்கும் என்று எடியூரப்பா கூறினார்.
கர்நாடகாவில் சுரங்க அதிபரும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா கட்சியின் ஒரே எம்எல்ஏவுமான ஜி.ஜனார்தன ரெட்டி இன்று தனது மனைவி அருணா லட்சுமி மற்றும் ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். மேலும் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். பெங்களூருவில் பாஜக தலைவர்கள் பிஎஸ் எடியூரப்பா, விஜயேந்திர எடியூரப்பா ஆகியோர் முன்னிலையில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜனார்த்தன ரெட்டி, “இன்று எனது கட்சியை பாஜகவுடன் இணைத்து பாஜகவில் இணைந்துள்ளேன்.பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக ஆதரிப்பதற்காக அம்மா கட்சிக்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எந்த நிபந்தனையும் இன்றி கட்சியில் சேர்ந்தேன்.பதவி தேவையில்லை,” என்றார்.
கட்சியில் இணைந்த ஜனார்த்தன ரெட்டியை எடியூரப்பா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவரது வருகை நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பலம் சேர்க்கும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக பல ஆண்டுகளாக பாஜகவில் இருந்த ஜனார்த்தன ரெட்டி, 2008-ம் ஆண்டு முதல்வராக பதவியேற்றபோது எடியூரப்பாவின் அமைச்சரவையில் இடம்பெற்றார். கனிம சுரங்க ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து, பாஜகவில் இருந்து விலகினார். 2022ல் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் கங்காவதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் பாஜகவுடன் இணைந்துள்ளார்.
கர்நாடகாவில் மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
Discussion about this post