WhatsApp Channel
அடுத்த 20 ஆண்டுகளில் ஐபிஎல் ஒளிபரப்புக்கான ஊடக உரிம மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பதாக ஐபிஎல் தலைவர் அருண் துமல் தெரிவித்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற போது, அவர் கூறியதாவது:
கடந்த 15 வருடங்களில் ஐபிஎல் பயணித்த பாதையையும், தற்போது ரசிகர்களிடம் இருக்கும் மதிப்பையும் பார்க்கும் போது, வரும் 2043ல் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் உரிமத்தின் மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கிறேன்.
ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க கிரிக்கெட் புதியதாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும். அதேபோல், அதன் தரத்தையும் அதிகரிக்க வேண்டும். ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று, மகளிர் பிரிமியர் லீக் போட்டிகள் தொடங்கியுள்ளதால் கிரிக்கெட் தொடர்பான வருவாய் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்றார்.
2008ல் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தின் மதிப்பு ரூ.6,000 கோடியாக இருந்த நிலையில், 2022 முதல் 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு மதிப்பு ரூ.48,000 கோடி என்பது நினைவுகூரத்தக்கது.
அருண் துமாலின் கூற்றுப்படி, அமெரிக்க என்எப்எல்லுக்குப் பிறகு ஐபிஎல் உலகின் மிகவும் மதிப்புமிக்க லீக்காக மாறும். கடந்த ஆண்டு தொடங்கி 11 ஆண்டு கால அளவில் என்எப்எல் போட்டியின் ஒளிபரப்பு மதிப்பு ரூ.9.16 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post