WhatsApp Channel
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்ய அமெரிக்க நிறுவனமான டெஸ்லா வரிச்சலுகை கோரியுள்ள நிலையில், எந்தவொரு தனிப்பட்ட நிறுவனத்திற்கும் இந்தியா சலுகை அளிக்காது என மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘இந்தியா அவ்வாறு சலுகை வழங்க முடிவு செய்தால், மின்சார கார்களை தயாரிக்க முன்வரும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான சலுகையாக வழங்கப்படும்.
டெஸ்லா நிறுவனத்திற்கு சுங்க வரி சலுகைகள் வழங்குவது குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனை நடைபெற்றது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை,” என்றார்.
2021 ஆம் ஆண்டில், டெஸ்லாவின் மின்சார கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று நிறுவனம் கோரியிருந்தது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க்கை கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். கார்களை இறக்குமதி செய்து சோதனை செய்த பிறகே டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்கும் என்றும், இந்தியாவில் இறக்குமதி வரி அதிகம் என்றும் எலோன் மஸ்க் கூறியிருந்தார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு தற்போது 60 முதல் 100 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்படுகிறது.
Discussion about this post