WhatsApp Channel
இந்தியாவில் வசிக்கும் கனடியர்கள் கவனமாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களை தடை செய்யப்பட்ட அமைப்புகளாக இந்தியா அறிவித்துள்ளது.
இதற்கிடையில், 2020 ஆம் ஆண்டில், பஞ்சாபில் ஒரு இந்து மத போதகரைக் கொல்லத் திட்டமிட்டதற்காக காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் என்ற அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜரை பயங்கரவாதியாக இந்தியா அறிவித்தது. தீவிரவாதி ஹர்தீப் சிங் குடியுரிமை பெற்று கனடாவில் வசித்து வந்தார். மேலும், கனடாவில் இருந்தபடியே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
இதற்கிடையில், ஜூன் 18 அன்று, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலத்திற்கு அருகே ஹர்தீப் சிங் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை குறித்து கனேடிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த மாத தொடக்கத்தில் இந்தியா வந்தார். இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளை கனேடிய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது.
மோதலுக்கு மத்தியில் கனேடிய வர்த்தக அமைச்சர் ஒருவரின் இந்திய விஜயமும் ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் கனடா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின், கனேடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். எனினும் கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனேடிய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது. கனடாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட அதிகாரி, இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வின் மூத்த அதிகாரி பவன்குமார் என்பது தெரியவந்துள்ளது.
கனடாவின் இந்த நடவடிக்கையை ஏற்று 5 நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கனடா உயர் அதிகாரியை மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் வசிக்கும் கனேடியர்கள் கவனமாக இருக்குமாறு கனேடிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கனடா அரசு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதால் கனடா குடிமக்கள் இந்தியாவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. எல்லா நேரத்திலும் மிகவும் கவனமாக இருங்கள். இந்தியாவிற்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். உங்கள் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதால், இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்கு முன், இந்தியா அவசியம்தானா என்பதை மீண்டும் யோசித்து முடிவு செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே இந்தியாவில் இருந்தால், நீங்கள் அங்கேயே இருக்க வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்யுங்கள். பாதுகாப்பு நலன் கருதி நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேற விரும்பினால், அது குறித்து முடிவு எடுங்கள்.
கணிக்க முடியாத பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக, பயங்கரவாத அச்சுறுத்தல், உள்நாட்டு கலவரம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக ஜம்மு காஷ்மீர் செல்வதை தவிர்க்குமாறு கனேடிய அரசு தனது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post