WhatsApp Channel
மதப் பிரிவினை போதும்.. அயோத்தி கோயிலுக்கு ராமர் சிலை வடித்த முஸ்லிம்கள்! இதுதான் இந்தியா
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தந்தை-மகன் முஸ்லிம் சிற்பிகள் அயோத்தி ராமர் கோவிலை அலங்கரிக்க ராமர் சிலைகளை உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2019ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
இதையடுத்து, அயோத்தியில் 2.7 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை இதற்காக உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 2020 இல், ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பணிகள் வேகமாக துவங்கியது. 1000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான முறையில் கோவில் கட்டப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட கலைநயத்துடன் செதுக்கப்பட்ட தூண்கள், கற்கள் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி கோயில் வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்நிலையில் ராமர் கோவிலின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. அதன்படி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோவிலை திறந்து வைக்கிறார். விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திறப்பு விழாவையொட்டி, அயோத்தி கோவில் வளாகத்தில் நிறுவப்படும் ராமர் சிலைகளை உருவாக்கும் பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தந்தை, மகன் ஆகிய 2 முஸ்லிம்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜமாலுதீன் மற்றும் அவரது மகன் பிட்டு ஆகியோர் கோயில் வளாகத்தை அலங்கரிக்கும் வகையில் ராமர் சிலைகளை வடிவமைத்துள்ளனர்.
விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகளை களிமண்ணில் வடிக்கும் சிற்பிகள் இவர்கள். அவர்களைப் பற்றி அறிந்த அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ஆன்லைனில் தகவல்களைச் சேகரித்து முகமது ஜமாலுதீனைத் தொடர்பு கொண்டு ராமர் சிலைக்கு ஆர்டர் கொடுத்தது. அதன்படி பைபர் ராம் சிலைகளை வடிவமைத்து வழங்கியுள்ளனர்.
இதுபற்றி முகமது ஜமாலுதீன் கூறுகையில், “களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை விட, குழாய்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிலைகள் நீடித்து நிலைத்து நிற்கும். இதனால், கோவிலுக்கு வெளியே சிலைகளை நிறுவ அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. பைபர் சிற்பத்திற்கு அதிக நுணுக்கம் தேவை. இதனால், ஒரு சிலையின் விலை ரூ.2.8 லட்சம் வரை உள்ளது.ராமர் மட்டுமின்றி துர்க்கை, ஜெகதாத்ரி ஆகியோரின் பிரம்மாண்டமான சிற்பங்களை உருவாக்கியுள்ளேன்.
ராமர் சிலைகளை வடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு கலைஞனாக இதைச் சொல்கிறேன். என்னைப் பொறுத்தவரை மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். நாட்டில் பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் உள்ளனர். இருப்பினும், வகுப்புவாத கலவரம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்,” என்றார்.
Discussion about this post