WhatsApp Channel
செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கரூர் மாவட்டம், மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு செல்லும் சாலையை அங்கிருந்த ஊழியர்கள் சேதப்படுத்தி, ஆவணங்கள், ரசீதுகள் போன்றவற்றை வைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.இதனால், அமலாக்கத்துறையினர் சோதனை செய்யாமல் திரும்பினர்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் மணல் குவாரிகள் இயங்கி வந்த நன்னியூர், மல்லம்பாளையத்தில் மத்திய துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தினர்.
அப்போது, குவாரியில் மணல் இருப்பு, அனுமதிக்கப்பட்ட இடத்தில் மணல் எடுக்கப்பட்டுள்ளதா, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் எடுக்கப்பட்டுள்ளதா என அளவீடு செய்தனர். மேலும் சட்டவிரோதமாக மணல் குவாரி செயல்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூரில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு எடுக்கப்படும் மணல் மோகனூர் அருகே செவித்திரங்கன்பட்டியில் உள்ள கிடங்கில் சேகரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இங்கு செப்டம்பர் 12ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர். இந்நிலையில், ஒருவந்தூர் குவாரி மற்றும் செவித்திரங்கன்பட்டி மணல் சேமிப்பு கிடங்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள தகவல்கள் சரிதானா என அமலாக்கத் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர்.
Discussion about this post