WhatsApp Channel
குற்றாலம் குற்றாலநாதருக்கும், அம்பிகை குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால், இருவருக்கும் தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்கவே இந்த ஏற்பாடு!
முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசை, மதுரை அழகர் கோயிலின் பிரதான பிரசாதம்.
திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம் பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து போட்டு தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.
சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள்.
எர்ணாகுளம் கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி ஆலயத்தில் மருந்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. விசேஷமாக நவராத்திரி நாட்களில் தங்கம் கலந்தும் வழங்கப்படுகிறதாம்!
திருச்சி வெக்காளியம்மன் கோயிலுக்கு முந்தைய பஸ் ஸ்டாப்பில் உள்ள ஜெய காளிகாம்பாள் கோயிலில் வெள்ளிதோறும் ராகு காலத்தில் ஸ்ரீதுர்க்கைக்கு இஞ்சிச் சாறும், தேனும் கலந்து அபிஷேகம் செய்து, பிரசாதமாக வழங்குகிறார்கள். இதனைக் குழந்தையின் நாவில் தடவினால், வாய் பேசாத குழந்தையும் சில நாட்களில் பேசத் துவங்கிவிடும்.
உறையூர் கமலவல்லி சமேத அழகிய மணவாளர் ஆலயத்தில் குங்கும பிரசாதத்திற்குப் பதில் சந்தன பிரசாதமே தரப்படுகிறது. இதை உட்கொள்ளலாம். மேலும் நிவேதனங்களில் காரத்திற்காக மிளகாய் வற்றல் சேர்க்கப்படாமல் மிளகு சேர்க்கப்படுகிறது.
Discussion about this post