WhatsApp Channel
3 வருட சிறைத்தண்டனை? பொன்முடி கைகூப்பி வணங்கினார்.. நீதிபதியின் எதிர்வினை என்ன?
சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது பொன்முடி கைகுனிந்து தண்டனையை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
2006 முதல் 2011ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, 2011ல், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாக்ஷியை விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து, கடந்த 19ம் தேதி தீர்ப்பளித்தார்.
இருவரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை விவரத்தை அறிவிப்பதற்காக வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாக்ஷி ஆகியோர் உடனிருந்தனர். தண்டனை விவரம் குறித்து நீதிபதி அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இருவரின் வயது மற்றும் மருத்துவக் காரணங்களைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என இருவரின் மருத்துவ அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்களுக்கு பிறகு விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடையவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது பொன்முடி தரப்பு வழக்கறிஞர், 2011-ம் ஆண்டு சட்டத்துறை செயலாளராக இருந்த அவர் (நீதிபதி ஜெயச்சந்திரன்) ஏற்கனவே இந்த வழக்கில் சொத்து முடக்கம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக்காட்டினார். அதற்கு பதில் அளித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு நடந்த சம்பவம் இது.
இதையடுத்து, பொன்முடியும், அவரது மனைவி விசாலாக்ஷியும் தங்களின் வயது மற்றும் மருத்துவக் காரணங்களைக் கூறி, குறைந்த தண்டனையை வழங்குமாறு மனு செய்தனர். தங்களுக்கு மேலான நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்திடம் நிவாரணம் பெறலாம் என்று நீதிபதி கூறினார்.
Discussion about this post