WhatsApp Channel
என் மண் என் மக்கள் பயணம், கோவை தொண்டாமுத்தூர் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மீது பேரன்பு கொண்ட கோவை மக்களால் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்று, ஏழு மணி நேரம் இருபது நிமிடங்கள் பொதுமக்கள் பேராதரவோடு நடைபெற்றதில் மகிழ்ச்சி.
சிதம்பரம் கோவிலுக்கு அடுத்தபடியாக திருவாதிரை திருவிழா சிறப்புடன் நடைபெறும் மேலை சிதம்பரம் என்றழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரம் பகுதியில் தொடங்கி, சனாதன தர்மத்தைப் போற்றும் அரவான் சுவாமி கோவில் வரை மக்களின் பேரன்பை உணர்ந்தோம்.
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக 17188 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கோவைக்கு மட்டும் 1458 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு, குறிச்சிக் குளம் முழுமையாக மேம்படுத்தப்பட்டு, 25 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள், திருக்குறளை 100 உலக மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், 23 மொழிகளில் மொழிபெயர்ப்பு நிறைவு செய்துள்ளார். ப்ரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட உள்ளது. தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு நமது பிரதமர் மிகுந்த மதிப்பு கொடுத்து வருகிறார்.
கோவையின் வளர்ச்சிக்கு, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் இரண்டு உலகத்தரமான ரயில் நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த போத்தனூர் ரயில் நிலையம் 25 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 29 மாதத்தில், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் தொடர்ந்த மின்கட்டண உயர்வால், தொழில் நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 15% முதல் 50% மின்கட்டண உயர்வு, நிலைக்கட்டணம் 430% உயர்வு, பீக் ஹவர் கட்டணம் 15% உயர்வு என கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டு, நாளை முழு வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார்கள்.
Post by @athibantvView on Threads
ஆனால், இன்று, காங்கேயத்தில், முதலமைச்சர் யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச்சீட்டைப் பார்த்து, டாலர் சிட்டி, டல் சிட்டி என்று நாட்டு நடப்பு தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். 2 கோடியே 27 லட்சம் குடும்பத் தலைவிகள் உள்ள தமிழகத்தில், 65 லட்சம் பேருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் அறிவித்திருந்த முதலமைச்சர், பாஜக போராட்டத்திற்குப் பிறகு, ஒரு கோடியே ஆறு லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதாக அறிவித்தார். 60% தாய்மார்களுக்கு உரிமைத் தொகை வரவில்லை. கொடுப்பதாகச் சொன்ன 40% பெண்களுக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
தாலிக்குத் தங்கம் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம், பால் விலை 4 முறை உயர்வு, நெய் விலை 3 முறை உயர்வு, சொத்து வரி, மின்சாரக் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு என திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பொதுமக்கள் மீது சுமத்தப்பட்ட சுமைக்கு, பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் கூடப் போதாது. இப்படி இருக்கையில், ஏதோ உலக சாதனை செய்து விட்டதைப் போல விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.
நமது பிரதமர் சிறுகுறு திட்டங்களுக்கு முத்ரா கடனுதவி உள்ளிட்ட திட்டங்கள் என பல திட்டங்களைக் கொண்டு வந்தும், மாநில அரசு கடமையான மின்சாரத்தை ஒழுங்காகக் கொடுக்காமல், கட்டண உயர்வும் செய்தால் எப்படி தொழிற்சாலை நடத்த முடியும்? இன்றைய முழு வேலை நிறுத்தத்தால், நிறுவனங்கள், தொழிலாளிகள் அவர்கள் குடும்பங்களும் பாதிக்கப்படும். எனவே, முதலமைச்சர் அனைவரின் கோரிக்கையை ஏற்று மின்கட்டணத்தைக் குறைப்பார் என்று நம்புகிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்து 29 மாதங்களாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கோவையின் குப்பைமேடாக ஆகியிருக்கும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் பல லட்சம் டன் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஆயிரம் டன் குப்பை கொட்டப்படுகிறது. குப்பைகளை தரம் பிரித்து மேலாண்மை செய்வோம் என்று கூறிய திமுக அரசு, தினமும் 1000 டன்னில் 250 டன் மட்டுமே தரம் பிரிக்க முயற்சிக்கிறார்கள். மைக்ரோ கம்போஸ்ட் 66 இடங்களில் 20 இடம்தான் வேலை செய்கிறது. மாநகராட்சியோ, மாநகராட்சி உறுப்பினர்களோ வேலை செய்வதில்லை.
கோவை மேயரின் தம்பி ஆவணங்களை எரிக்கிற செய்தி தினமலரில் வருகிறது. மக்களுக்காக உழைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பினாமியாக வேலை செய்கிறார்கள். மக்களுக்காக வேலை செய்வதில்லை.
நல்லூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம். 40 கோடி செலவில், 50% பணி நிறைவடைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், பேருந்து நிலையத்தை முழுமைபடுத்தாமல், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள்.
கோவையில் மட்டும் தினமும் பத்தாயிரம் யூனிட் கனிம வளம் கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், இரண்டு வருடங்களில் இயற்கை வளங்கள் முழுவதுமாக காணாமல் போய்விடும். இதனை எதிர்த்து, பாஜக பொள்ளாச்சியிலும் கோவையிலும் ஆர்ப்பாட்டம் செய்தது. சிறிது காலம் நிறுத்திவிட்டு, கடத்தல் மீண்டும் தொடர்கிறது. மக்கள் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வரும் பாஜகவையும் பிரதமரையும் தவறாகப் பேசுவதையே முழு நேரமாகத் திமுக செய்கிறது.
அமரர் நரசிம்ம நாயுடு அவர்களால், 1899 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட சிறுவாணி அணை, 30 ஆண்டுகளுக்குப் பிறகு செயல்பாடுக்கு வந்தது. இதற்கான நிர்வாகப் பணிகளுக்கான செலவை, கோவை மாநகராட்சி செய்கிறது. ஆனால், கேரள அரசு, பாலக்காடு நெல்லிப்பதி இடையே சிறுவாணி அணையை மறித்து அணை கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால், பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறையும்.
கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுடன் நட்பைத் தொடர்வதற்காக, தமிழக உரிமையை விட்டுக் கொடுக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கோவை சிறுவாணி அணை, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லைக்கு பயன்படும், செண்பகவல்லி அணை, பொள்ளாச்சி திருப்பூருக்கு பாசன வசதி தரும் பரம்பிக்குளம் ஆழியார் திட்டம், தென்காசி வைப்பாறு பம்பா அச்சன்கோவில் திட்டம், தேனி மதுரைக்கு வளம் தரும் முல்லைப் பெரியாறு அணை, கன்னியாகுமரியின் நெய்யாறு என தமிழகம் முழுவதும் இருக்கும் விவசாயிகளை வஞ்சித்து, கேரள அரசுக்கு ஆதரவாக நடக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நிலை நீடித்தால், இன்னும் 10 ஆண்டுகளில், கோவையில் தண்ணீர்ப் பஞ்சம் வரும். தங்கள் அற்ப அரசியலுக்காக தமிழக மக்களை வஞ்சிக்கிறது திமுக.
மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் ஒன்பதாண்டு கால ஆட்சியில் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறோம். உலகத் தலைவர்கள் அனைவரும் நமது பிரதமரைப் போற்றுகிறார்கள். ஒன்பதாண்டு கால ஆட்சி நமது நாட்டின் வளர்ச்சியின் அடையாளம். 400 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த பெருமையை இந்தியா விரைவில் மீட்கும், நம்முடைய காலகட்டத்திலேயே நமது நாடு உலக அரங்கில் முதல் இடத்திற்கு வருவதை பார்ப்போம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
ஏழை எளிய மக்களை முன்னேற்ற பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் நமது பிரதமர். காங்கிரஸ் ஆட்சியில் 67 ஆண்டுகளாக இல்லாத கழிப்பறை வசதி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் 11 கோடி மற்றும் தமிழகத்தில் 55 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகள் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு திட்டத்தின் மூலம், தமிழகத்தில் மட்டும் 15 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி நடைபெறுகிறது.
ஊழலால் சீர்குலைந்திருந்த நம் நாடு, லஞ்சம் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டு, இடைத்தரகர்கள் இல்லாமல், மக்களுக்கு நேரடியாகப் பலன்கள் சென்றடைகின்றன. நமது பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்தால் தாய்மார்கள் விட மாட்டார்கள். பிரதமர் மோடி அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்த காங்கிரஸ், எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்திருக்கிறது.
தனது அமைச்சரவையில் இருக்கும் பெரும்பாலான அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின். மகனும் மருமகனும் சேர்ந்து 30,000 கோடி சம்பாதித்த ஊழலுக்கு இலக்கணமான கட்சி திமுகவும் காங்கிரஸைப் போல படுதோல்வி அடையும்.
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி ஆகியவை வேகமாக வளர்ச்சியடையும் நகரங்கள். இவை நன்கு முன்னேற, ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் திமுக மற்றும் அவர்கள் கூட்டணியை தமிழகத்தில் இருந்து வேரறுக்க வேண்டும். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் கரத்தை வலுப்படுத்த பாஜக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கோவை என்றும் பிரதமர் மோடி அவர்கள் பக்கம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
Discussion about this post