WhatsApp Channel
பாஜக தென் மாநில சிறுபான்மை அணி செயலாளர் பாத்திமா அலி பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பாத்திமா அலி பா.ஜ.க.வில் தொடர்ந்தால் முஸ்லிமாக வாழ தகுதியற்றவராகி விடுவோன் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக-பாஜக கூட்டணி நீடித்து வந்த நிலையில், திடீரென அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதிமுகவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வசைபாடி வரும் நிலையில், பாஜக கூட்டணியில் அதிமுக இனி இடம்பெறாது என்று எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவை எடுத்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனி அணியாக போட்டியிடுகின்றன.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் பலர், ஒருவர் பின் ஒருவராக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அ.தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, 14 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை, பா.ஜ., தன் கட்சிக்கு இழுத்தது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் எம்ஜிஆர் காலத்து எம்எல்ஏக்கள். தற்போது அரசியலில் தீவிரமாக இல்லாதவர்கள்.
இந்நிலையில் அதிமுக தரப்பிலும், பா.ஜ.க.வினரும் ஆள் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய நடிகை கவுதமி நேற்று அதிமுகவில் இணைந்தார். நேற்று அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
இதையடுத்து, முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் இயக்கத்தின் தலைவரும், பா.ஜ., சிறுபான்மை அணி மாநில செயலாளருமான பாத்திமா அலி, திடீரென பா.ஜ.,வில் இருந்து விலகி, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
அதிமுகவில் இணைந்த உடன்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாத்திமா அலி, நாடு தற்போது இருக்கும் சூழ்நிலையில் சிறுபான்மை மக்களை ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.அதற்கு உதவும் கட்சியான அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன் .தொடர்ந்தால். பா.ஜ.கவில் இருந்தால் முஸ்லிமாக வாழும் தகுதியை இழந்து விடுவேன்.
முஸ்லிம்களும் அவர்களின் வாழ்விடங்களும் குறிவைக்கப்பட்டு தாக்கப்படும் சூழ்நிலையில் நான் பாஜக அரசில் தொடர்ந்து அங்கம் வகித்தால், நான் முஸ்லிமாக இருக்க தகுதியற்றவனாக மாறிவிடுவேன். ராமர் கோவில் பிரச்னை முடிந்து, அடுத்ததாக கிருஷ்ணர் கோவில் என்ற பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. மசூதிகள் இடிக்கப்படுகின்றன. அந்த நிலையை என்னால் ஏற்க முடியாது.
அதிமுக ஒருபோதும் நாத்திகக் கொள்கையை எடுத்ததில்லை. எம்.ஜி.ஆர் காலம் முதல் ஜெயலலிதா, இப்போது எடப்பாடியார் வரை சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருந்துள்ளனர். சிறுபான்மையினருக்கு அதிமுக தான் பாதுகாப்பு. அதனால் நானும் அதிமுகவில் இணைந்துள்ளேன் என்றார்.
அதிமுகவில் இணைவதற்கு முன்பு
முத்தலாக் தடை விதித்து முஸ்லிம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உயிருக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளித்துள்ளது என்றும், பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்தியர்களின் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் பாத்திமா அலி முன்பு பேசியது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாத்திமா அலியின் பேச்சு
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினரின் வாக்குகளை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாவலர் அதிமுக என்று கூறி வருகிறார். பாத்திமா அலியின் வருகையால் அவரது முயற்சிகள் வலுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post