WhatsApp Channel
தமிழகம் முழுவதும் புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
2024ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க தயாராகிவிட்டனர். டிசம்பர் மாதம் வீசிய மிக்ஜாம் சூறாவளியால் ஏற்பட்ட கனமழையில் இருந்து மீண்டு மக்கள் இன்று நள்ளிரவில் ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க மெரினா காமராஜர் சாலை, அண்ணாசாலை, வடபழனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதேபோல், பெண்கள் பலாத்காரம், சாலை விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நகரின் முக்கிய இடங்களில் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு சந்தேகப்படும் நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.
மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை ஆகிய கடலோரப் பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மெரினா சர்வீஸ் சாலை, வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாத வகையில் இரும்பு தகடுகளால் மூடப்பட்டது. மெரினா காமராஜர் சாலையில் இரவு 8 மணியளவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
மெரினா காமராஜர் சாலையில் புத்தாண்டை கொண்டாட வந்தவர்கள் திருவல்லிக்கேணி, சாந்தோம் பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு காமராஜர் சாலையில் நடந்து சென்றனர். புத்தாண்டை வரவேற்க காமராஜர் சாலையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே உள்ள மணி கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இரவு 8 மணிக்கு மேல் இந்த பகுதியில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரே இடத்தில் கூடி புத்தாண்டை வரவேற்றனர்.
இந்நிலையில் சரியாக 12 மணி ஆனதும் அனைவரும் ஒன்று கூடி புத்தாண்டு வாழ்த்துகளை கோஷமிட்டு கைகுலுக்கி புத்தாண்டை வாழ்த்தினர். வண்ணமயமான பலூன்களை பறக்கவிட்டனர்.
அதேபோல் பல்வேறு வகையான கேக்குகளை கொண்டு வந்து வெட்டி புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் அருகில் இருந்தவர்களுக்கு கேக் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதனால் மெரினா காமராஜர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் மெரினா காமராஜ் சாலையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
கடற்கரை பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பைனாகுலர் மூலம் போலீசார் கண்காணித்தனர். வாகன விதிகளை முறையாக கடைபிடிக்க வலியுறுத்தி காமராஜர் சாலையில் போக்குவரத்து போலீசார் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில், புத்தாண்டை கொண்டாட வந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று கையெழுத்திட்டனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் உற்சாக நடனம் ஆடினர். புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் உள்ள சாண்டோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
Discussion about this post