WhatsApp Channel
இங்கிலாந்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இங்கிலாந்தின் பெட்ஃபோர்ட்ஷையரின் தலைநகரம் லூடன். தலைநகர் லண்டனில் இருந்து வடக்கே 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள இது சர்வதேச விமான நிலையத்தைக் கொண்டுள்ளது. நேற்று இரவு விமான சேவை மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது அங்குள்ள பார்க்கிங் கட்டிடத்தின் 3வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த கார்களும் தீப்பிடித்து எரிந்தன.
சிறிது நேரத்தில் கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் கடும் புகை மூட்டமாக காட்சியளித்தது.
1500 கார்கள் எரிந்து நாசமானது
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் உதவியுடன் தண்ணீர் தெளித்தும், ரசாயனங்கள் தெளித்தும் தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் 1500க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமானது. மேலும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்
தீயை அணைக்கும் போது ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 தீயணைப்பு வீரர்கள் மயங்கி விழுந்தனர். மேலும், தீ விபத்தில் பலத்த காயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். விபத்து காரணமாக, விமான நிலையம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், பொதுமக்கள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமானம் ரத்து
தீ விபத்து காரணமாக லூடன் விமான நிலைய சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. லூடன் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. லூடனில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் ரயில் நிலையங்கள் நிரம்பியுள்ளன. இதனால் வெளியூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தற்போது நிலைமை சீரடைந்ததையடுத்து விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
Discussion about this post