WhatsApp Channel
காசாவின் மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இஸ்ரேல் தனது போரை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமாகி வருகிறது. உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் காசாவின் தெருக்களில் அப்பாவி மக்கள் அலைந்து திரிவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. சர்வதேச மனிதாபிமான உதவிகள் எகிப்தின் ரபா எல்லை வழியாக காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு இது போதாது என்று உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.
கடந்த இரண்டு நாட்களில், காஸாவில் உள்ள உதவி மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர், இது அங்குள்ள மோசமான சூழ்நிலையின் அறிகுறியாகும். காஸாவில் நாளுக்கு நாள் கவலைக்கிடமான சூழல் நிலவி வந்தாலும் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காஸாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
நேற்று மேற்குக் கரையில் உள்ள ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் பாலஸ்தீன இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பாலஸ்தீன இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், வடக்கு காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இஸ்ரேலிய தரைப்படைகள் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் போராளிகளுடன் பரந்த சுரங்கப்பாதை வலையமைப்பில் சண்டையிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளின்கன் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் செல்லவுள்ளதாகவும், அங்குள்ள அரசாங்க உறுப்பினர்களுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Discussion about this post