WhatsApp Channel
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
அக்டோபர் 7 ஆம் தேதி, காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போன்ற ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது பயங்கரவாதத் தாக்குதலைத் தொடங்கின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஹமாஸ் 240க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை இஸ்ரேலில் இருந்து காசாவிற்கு கடத்திச் சென்றது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் போரை அறிவித்தது.
காஸாவில் இஸ்ரேல் நடத்திய போரில் 15,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது மேற்குக் கரையில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் முயற்சித்தன. இந்த முயற்சியின் பலனாக கடந்த 24ம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
மேலும், ஹமாஸ் தனது பணயக்கைதிகள் சிலரை நிபந்தனையுடன் விடுவித்தது. இதற்கு நேர்மாறாக, தங்கள் நாட்டு சிறைகளில் இருந்த சில பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது.
அதன்படி கடந்த 7 நாட்களாக அமுலில் உள்ள தற்காலிக போர்நிறுத்தத்தின் விளைவாக ஹமாஸ் பிடியில் இருந்த பணயக்கைதிகளில் 105 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 81 பேர் இஸ்ரேலியர்கள், 23 பேர் தாய்லாந்து மற்றும் ஒருவர் பிலிப்பைன்ஸ். இதற்கிடையில், ஹமாஸ் இன்னும் 137 பணயக்கைதிகளை காஸாவில் வைத்திருக்கிறது.
இதனிடையே, தற்காலிக போர் நிறுத்தம் இன்று காலை 7 மணியுடன் (இஸ்ரேல் நேரப்படி) முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தை நீட்டிக்க கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய அமைப்புகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
தற்காலிக போர்நிறுத்தம் முடிவடைந்ததையடுத்து, காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காஸா மீதான தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதேபோல் ஹமாஸ் ஆயுதக் குழுவும் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தியது. மேலும், காஸாவில் இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் போர் தொடங்கியுள்ளதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post