WhatsApp Channel
தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. பிற மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் ஜனவரியில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது. இதை கருத்தில் கொண்டு 5 மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
இதுகுறித்து அந்தந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. தெலுங்கானா மாநிலத்தில் அதிகாரிகளின் ஆய்வுப் பயணம் நேற்று நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் பொதுச் செலவுத் தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான வியூகங்களை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்ட முடிவுகளின் அடிப்படையில் அடுத்த சில நாட்களில் 5 மாநிலங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட 5 மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்தில் பாஜகவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸும், தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருகின்றன என்பது நினைவுகூரத்தக்கது.
Discussion about this post